அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்தது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Feb 19 2020 7:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேட்டு விசாரணையை கைவிட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில், அமைச்சர் எஸ்.பி வேலுமணி முறைகேடு செய்ததாகக்கூறி, அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை ஆய்வு செய்ததில், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கு செல்லாததாகி விட்டதால் வழக்கை முடித்து வைக்க வேண்டுமெனவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அமைச்சர் மீதான வழக்கை கைவிட தமிழக அரசு எப்படி முடிவு எடுத்தது என்பது குறித்தும், லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் மாதம் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.