ஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர் நிகழ்த்திய அரிய சாதனை
Feb 9 2020 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவர் தனது வயலில் ஆயிரத்து 30 வகையான நெல் ரகங்களை பயிரிட்டு அரிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியாவில் சுமார் 22 ஆயிரம் நெல் ரகங்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அவற்றில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. இதுபோன்ற நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக வேதாரண்யம் அருகே குறவப்புலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவரான சரவணன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக குடும்பத்துடன் களமிறங்கிய அவர், அரிய நெல் ரகங்களை சேகரித்து அவற்றை தனது வயலிலேயே சாகுபடி செய்துள்ளார். அசாம், ஒரிசா, மேற்குவங்கம், மணிப்பூர், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்குச் சென்று ஏராளமான நெல் ரகங்களை மீட்டு வந்தார். சொர்ணமுகி, தங்கத்தம்பா, சிறுமணி, செங்கல்பட்டு என ஆயிரத்து 30 நெல் ரகங்களைக் கொண்டு தனது நிலத்தில் சிறிய பாத்திகள் அமைத்து பயிரிட்டார்.
தற்போது இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர் முற்றி விளைந்துள்ளன. இதனை அறிந்த பலரும் இந்த வயலை ஆர்வமுடன் பார்வையிட்டுச் செல்கின்றனர். சரவணகுமாரின் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்மை துறை சார்பில் குடியரசுதின விழாவில் 10 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.