டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு மோசடியில் தொடரும் கைது - பணம் கொடுத்து வெற்றி பெற்ற மேலும் 3 பேர் கைது - புழல் சிறையில் அடைப்பு
Jan 28 2020 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில், மோசடி செய்து தேர்வெழுதிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 39 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த 39 நபர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுத ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி., டின்.என்.பி.எஸ்.சி அதிகாரிகள், தேர்வர்கள், இடைத்தரகர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக நடைபெற்ற விசாரணையில், இடைத்தரகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து மோசடி செய்து வெற்றி பெற்ற ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை சேர்ந்த கார்த்தி, ஆவடியை சேர்ந்த வினோத் குமார், பண்ரூட்டியை சேர்ந்த சீனிவாசன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து எழும்பூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் திரு.நாகராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.