ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தலைவராக உள்ள தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு ஒத்திவைப்பு
Jan 20 2020 8:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி திரு. ஓ.ராஜா தலைவராக உள்ள தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்தி வைத்தது.
மதுரை ஆவினில் இருந்து பிரிந்த தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், 13 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், எந்த அறிவிப்புமின்றி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி 17 உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சேர்மனாக, தமிழக துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி திரு. ஓ.ராஜா உள்ளார். மேலும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் செயல்பட தடை விதிக்கக்கோரி, பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த திரு. அமாவாசை என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், 17 உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்தனர்.
இந்த தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஆவின் நிறுவனம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் திரு. துரைசாமி, திரு. ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, இறுதி தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.