தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழா : தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு
Jan 20 2020 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழா இன்று முதல் வருகின்ற 27ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சாலைப்பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர், பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹெல்மெட் அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.
ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கொடியசைத்து தொடக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இறுதியில் பொதுமக்களிடையே உரையாற்றிய ஆட்சியர், ஓட்டுநர் உரிமம் பெற்றுதான் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும், செல்போன் பேசியபடியும், அதிக வேகத்திலும் வாகனம் ஓட்டுதலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைக்கவசம் மூலம் உயிரிழப்புகள் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பேருந்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. மண்டல பொது மேலாளர் திரு.சிவலிங்கம் கண்காட்சியை தொடக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் இந்த பேருந்து கொண்டு செல்லப்பட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.