உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா - சிங்கத்தைப் போல சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய இளம் காளையர்கள்
Jan 17 2020 9:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நிறைவுபெற்றது. வெற்றி பெற்ற காளையர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்றது. கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டதையடுத்து பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் துள்ளிகுதித்து வந்த காளைகள், வீரர்களை துவம்சம் செய்தது. மாடுபிடிவீரர்களும் தங்களது வீரத்தை பறைசாற்றும் வகையில் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5.10 மணி வரை 9 சுற்றுகளாக நடைபெற்றன. 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் களம்கண்டனர். போட்டியைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
சிறப்பாக களம்கண்டு 16 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித்துக்கு கார் மற்றும் 4 பசுமாடுகள் பரிசாக வழங்கப்பட்டன. 14 காளைகளை அடக்கிய அழகர்கோவில் ஆயத்தம்பட்டி கி்ராமத்தைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு இரு சக்கர வாகனமும், 13 காளைகளை அடக்கிய அரிட்டாபட்டியை சேர்ந்த கணேசனுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. காளையை முறையாக வளர்த்து பயிற்சி அளித்ததன் காரணமாக, முதன்முறையாக தனது காளை பரிசை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக காளையின் உரிமையாளர் தெரிவித்தார்.