காணும் பொங்கலையொட்டி சுற்றுலாத்தலங்கள், கடற்கரை மற்றும் ஆலயங்களில், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் பொதுமக்களின் வசதிக்காக, கூடுதலாக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை சிறுவர்கள் கண்டு மகிழ்ந்தனர். பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு அவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில், திருமணமாகாத 101 பெண்கள் வீட்டு வாசல்களில் வண்ண கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர் பொங்கல் பானையை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று, முச்சந்தி மாரியம்மன் ஆலயத்தை அடைந்தனர். அவர்கள் கோயில் முன்பாக ஒன்று கூடி, கும்மியடித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி கடற்கரை, சுற்றுலா படகுகள், திருவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கடல் சங்கமம் பகுதியில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து, உணவுவகைகளை பரிமாறி உண்டு மகிழ்ந்தனர். படகு சவாரி செய்தும் காணும் பொங்கலை கொண்டாடினர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில், கிராமமக்கள் இணைந்து மணல்மேடு திருவிழாவை கொண்டாடினர். மேட்டுப்பட்டி, சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் அங்கு குவிந்த கிராம மக்கள், ஆரவாரத்துடன் உற்சாக முழக்கமிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள, மாவட்ட அறிவியல் மையத்திற்கு ஏராளமானேர் வருகை தந்திருந்தனர். அங்கு நடைபெற்ற, சித்த மூலிகை கண்காட்சியையும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆலயத்தில் காணும் பொங்கலையொட்டி, ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தேவயானை சமேதராக, தங்க ஆபரணம் புஷ்ப அலங்காரத்துடன், ஏலக்காய் மாலை அணிவிக்கப்பட்டு மலைக் கோயிலில் இருந்து, கீழ் இறங்கி திருத்தணி நகர் முழுவதும் திருவீதியுலா வந்தார். பெண்கள் வாசல்களில் வண்ண கோலமிட்டு, முருகப்பெருமானை வரவேற்றனர்.
திருச்சி முக்கொம்பு பகுதியில், தங்கள் குடும்பத்தினருடன் குவிந்த மக்கள், உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி, முக்கொம்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
புதுச்சேரி கடற்கரை பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு படகு குழாம் ஆகியவற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதேபோல் மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், மாதா கோவில்கள் உள்ளிட்டவற்றையும், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
சென்னை மாதவரம் மற்றும் விருகம்பாக்கம் ஆவின் பாலகங்களில், கிராமிய பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற விழாவில் அரங்கேற்றப்பட்ட தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். விடூர் மற்றும் கோமுகி அணைகளில் சுற்றுலாத் தலங்களிலும், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், திருவக்கரை வக்ர காளியம்மன் கோயில் உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களிலும், பொதுமக்கள் குவிந்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், பழையமாதா ஆலயம், நடுத்திட்டு, தியானகூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்துனூர் அணை அணைக்கு, ஏராமானோர் குடும்பத்துடன் வருகை புரிந்தனர். அங்குள்ள படகுகளில் சவாரி செய்தும், குழந்தைகள் பூங்கா மற்றும் நீச்சல் குளத்தில் விளையாடியும், முதலை பண்ணை உள்ளிட்டவைகளையும் அவர்கள் கண்டு ரசித்தனர்.