இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகளை தஞ்சை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு மீது புகார்
Apr 24 2014 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை தொகுதியில், தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் டி.ஆர். பாலு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தனது தேர்தல் பணிக்காக அத்தொகுதியில் அமர்த்தியிருப்பதாகவும், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட கெடு முடிந்தும், இன்னும் அவர்கள் அங்கேயே பதுங்கியிருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர். பாலு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து, 2 ஆயிரத்திற்கும் அதிகமான ரவுடிகளையும், வழக்கறிஞர்களையும் அங்கு அழைத்து வந்துள்ளார். இவர்கள், கடந்த ஒன்றரை மாத காலமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், தொகுதிக்குச் சம்பந்தமில்லாத அனைவரும், அங்கிருந்து வெளியேற வேண்டும் என விதிக்கப்பட்ட கெடு முடிந்தும், தொடர்ந்து அங்கேயே பதுங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அவர்கள் மூலம் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றக்கோரி திரு. ஆம்பல் ராஜ்மோகன் என்ற வழக்கறிஞர், மாவட்ட தேர்தல் அதிகாரியான திரு. என். சுப்பையனிடம் புகார் மனு அளித்துள்ளார். வெளியூர் ஆட்களைக் கொண்டு, டி.ஆர். பாலு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தி.மு.க.வினர், ரவுடிகள் உள்ளிட்ட பலரை அழைத்து வந்து, தத்தமது தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.