முந்தைய தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தால் போரூர் மேம்பாலப் பணி தடைபட்டதாக சட்டப்பேரவையில் குற்றச்சாட்டு - முதலமைச்சரின் உத்தரவையடுத்து கட்டுமானப் பணி விறுவிறுபடைந்துள்ளதாக அமைச்சர் தகவல்
Jul 22 2014 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அருகே உள்ள போரூர் சந்திப்பில், கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது பாதியிலேயே கைவிடப்பட்ட மேம்பாலப் பணிகள், மீண்டும் தொடங்கப்படும் என்றும், பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, கடந்த தி.மு.க. ஆட்சியின்போது போரூர் சந்திப்பில் அவசர கதியில் மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலேயே அது பாதியில் கைவிடப்பட்டதாகக் குறிப்பிட்டார். தற்போது, இப்பாலத்தை கட்டி முடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், நிலத்தை கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகு, பாலம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சாலை போக்குவரத்து வசதி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கிராமப்புற மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அண்மையில் 1,436 புதிய வழித் தடங்களை தொடங்கி வைத்ததாகக் குறிப்பிட்டார். எனவே, மேலும் எங்கெல்லாம் போக்குவரத்து வசதி தேவைப்படுகிறதோ, அந்தப் பகுதிகளுக்கும் புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திருமதி கோகுல இந்திரா, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நூற்பாலை மற்றும் ஆண்டிப்பட்டி அண்ணா நூற்பாலை உள்ளிட்ட 5 நூற்பாலைகளுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சுமார் 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, அவை மேம்படுத்தப்பட்டு வருவதால், அங்கு, பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
நெல்லை மாநகராட்சி மக்களின் குடிநீர்த்தேவை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி, அரியநாயகிபுரம் அணைக்கட்டு நீர்த்தேக்கப்பகுதியில் 230 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் 2016-ம் ஆண்டில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.