மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டன
Aug 28 2014 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கருப்பர் மலை விளக்குப்பகுதியில் புதிய மாற்று ஆழ்குழாய் கிணற்றை அமைச்சர் டாக்டர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருதம்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்மோட்டார் மற்றும் மாங்குடி கிராமத்தில் கட்டப்பட உள்ள ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்ட கல்லூரி மாணவிகள் விடுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. K. அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் திரு. டி.பி. ராஜேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இதேபோல், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரிப்பட்டி - குன்னத்தூர் இடையில் தார்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணியை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அசோக்குமார் தொடங்கி வைத்தார்.
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவில், 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள அம்மா பூங்காவிற்கான கட்டுமானப் பணியை மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் தொடங்கிவைத்தார்.