பழனி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் - பா.ம.க. மாவட்ட துணைச்செயலாளர் உள்பட 4 பேர் கைது
Apr 24 2014 2:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மதுபாட்டில்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். தடையை மீறி மதுபானம் விற்பனை செய்ததாக பா.ம.க. மாவட்ட துணைச்செயலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, நேற்று முன்தினம் முதல் இன்று இரவு வரை மதுபான கடைகளை மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கம்போல் தேர்தல் பறக்கும் படையினரும், மதுவிலக்குப் போலீசாரும் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பா.ம.க. மாவட்ட துணைச்செயலாளர் சுப்பிரமணியன் என்பவர் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே நரிக்கல்கரடு பகுதியில், மதுபான பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்து சென்ற ராசிபுரம் தேர்தல் பறக்கும்படையினர் சந்தேகத்திற்குரிய வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 109 மதுபாட்டில்கள் மறைந்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பான வழக்கில் செல்லம்மாள் என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் பகுதியில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மாவட்ட மதுவிலக்குப் போலீசார், இதுதொடர்பான வழக்கில் சிவகிரிப்பட்டியைச் சேர்ந்த பாண்டி உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.