முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட துணை மேற்பார்வைக்குழுவினர், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டம், நீர் அழுத்தம், மழையளவு, பராமரிப்புப் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு நடத்திய துணை மேற்பார்வைக்குழு, இதுதொடர்பான அறிக்கையை மேற்பார்வைக் குழுவிடம் தாக்கல் செய்ய உள்ளது.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மேற்கொண்ட இடைவிடாத முயற்சி மற்றும் தொடர் சட்டப்போராட்டங்களைத் தொடர்ந்து, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை கவனிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய நீர்வள ஆணையத்தின் அணைகள் பாதுகாப்புப் பிரிவு தலைமைப் பொறியாளர் திரு. L.A.V. நாதன் தலைமையில், 3 பேர் கொண்ட குழு, அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழகத்தின் சார்பில், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் திரு. சாய்குமார், கேரள நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குரியன் ஆகியோர் இடம் பெற்றனர். இக்குழுவினர் கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி திருவனந்தபுரத்தில் முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ஜூலை 17-ம் தேதி பெரியாறு அணைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட அக்குழுவினர், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில், மதகுகளை இறக்கி விட்டனர்.
இந்நிலையில், கண்காணிப்பை மேற்கொள்ளும் மூவர் குழுவுக்கு உதவும் வகையில், 5 பேர் கொண்ட துணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய அரசு சார்பில், மத்திய நீர்வளக்குழு செயற்பொறியாளர் திரு. உம்ஹர்ஜி ஹாரிஸ் கிரிஷ், தமிழக அரசு சார்பில், செயற்பொறியாளர் திரு. மாதவன், உதவி செயற்பொறியாளர் திரு. செளந்திரம், கேரளா சார்பில் செயற்பொறியாளர் திரு. ஜார்ஜ் டேனியல், உதவி செயற்பொறியாளர் பிரசீது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு வாரந்தோறும் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டு, மேற்பார்வைக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். கடந்த மாதம் 19-ம் தேதி, மேற்பார்வைக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டபோது, துணைக்குழுவினரும் உடனிருந்தனர்.
இந்நிலையில், துணைக்குழு முதன்முறையாக நேற்று முல்லைப்பெரியாறு அணையில் தனியாக ஆய்வு மேற்கொண்டது. 145 அடி நீளமுள்ள சுரங்கப்பகுதி, 10 அடி நீளமுள்ள சுரங்கப்பகுதி, மதகு பகுதியில் ஏற்றி இறக்கப்படும் ஷட்டர்களின் கியர் பாக்ஸ், அணையின் நீர்மட்டம், நீர் அழுத்தம், மழையளவு, பராமரிப்புப் பணிகள் போன்றவற்றை இக்குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை மேற்பார்வைக் குழுவிடம், துணைக் குழுவினர் தாக்கல் செய்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.