மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து தமிழகமெங்கும், இன்று அண்ணா தொழிற்சங்க பேரவையினர் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய போராட்டத்தில், அண்ணா தொழிற்சங்கத்துடன் இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் உணர்வுபூர்வமான உந்துதலுடன் கலந்து கொண்டுள்ளனர். கலங்கிய கண்களோடு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் அனைவரும், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா விடுதலையாகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மதுரை பைபாஸ் சாலையில், இன்று உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. அண்ணா தொழிற்சங்கத்துடன் இணைந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உணர்ச்சி பொங்கக் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில், நகர தொலைபேசி நிலையம் அருகே நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு எதிராக வழங்கப்பட்ட கர்நாடகத் தீர்ப்பைக் கண்டித்து, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் காஞ்சிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில், கருப்பு பேட்ஜ் அணிந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் விடுதலைக்கான வேண்டுதலாக, நாகப்பட்டினம் அவுரிதிடல் அருகே, அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் 20 பேர் மொட்டையடித்துக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், நகரின் வி.வி.டி. சிக்னல் அருகே நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பொய் வழக்கு மற்றும் தீர்ப்புக்கு எதிராக, திருவாரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது திருவாரூர் மாவட்ட சுமைதூக்குவோர் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் சங்கம், மின்சாரவாரிய தொழிலாளர் சங்கம், கட்டடத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. போராட்டத்தில் மக்களின் முதல்வரை விரைவில் விடுவிக்க வேண்டுமென முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், தொழிலாளர்கள் தவிர பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வெங்கமேடு அண்ணா சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.