மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு பேராதரவு தெரிவித்து, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும், சென்னையில் நேற்று அறவழி மவுன உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். செல்வி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதுடன், சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகெங்கும் வாழ்கின்ற 10 கோடி தமிழ் மக்களின் ஒரே முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக புனையப்பட்ட பொய் வழக்கிலிருந்து, அவர், நிரபராதி என விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்பது உறுதி என்றும் தமிழ்த்திரையுலகினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவுக்கு எதிராக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு தமிழகம் முழுவதும் தொடர்ந்து, எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும், தங்களின் வருத்தத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் மவுன உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் சென்னை City திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தொலைக்காட்சி கலைஞர்கள் கூட்டமைப்பு, திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் உட்பட தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த அனைத்து அமைப்பினரும் பெருந்திரளாக பங்கேற்று செல்வி ஜெயலலிதாவுக்கு தங்கள் பேராதரவைத் தெரிவித்தனர்.
செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக, பொய்யாக புனையப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, நிரபராதி என நிச்சயம் அறிவிக்கப்படுவார் என்றும், மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் திரைப்படத்துறையினர் உறுதிபடத் தெரிவித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான திரு.சரத்குமார், நடிகர்கள் திரு.ராமராஜன், திரு.ராதாரவி, திரு. பாக்யராஜ், திரு.சரவணன், திரு.செந்தில், திரு. விவேக், திரு. மனோபாலா, திரு. அஜய் ரத்னம், திரு. குண்டுகல்யாணம், திரு. மயில்சாமி, திரு.எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும், வெண்ணிற ஆடை நிர்மலா, குமாரி சச்சு, திருமதி. குயிலி, திருமதி. நளினி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நடிகைகளும் மவுன உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த திரு. கேயார், திரு.T. சிவா, திரு.கலைப்புலி தாணு, திரு.கே.டி. குஞ்சுமோன் உள்ளிட்டோரும், இயக்குநர்கள் திரு.விக்ரமன், திரு.ஆர்.கே.செல்வமணி, திரு.பி.வாசு, திரு. எஸ்.ஜே. சூர்யா, திரு.லியாகத் அலிகான், இசையமைப்பாளர்கள் திரு. தேவா, திரு. கணேஷ் உட்பட ஏராளமானோர் மவுன உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஏராளமான நடிகர்-நடிகைகள், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
உண்ணாவிரதம் நடைபெற்ற பகுதியில், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. "தமிழ்மகளின் விடுதலை, தமிழகத்தின் விடுதலை", "பொய்வழக்கில் இருந்து மீள்வார், மீண்டும் தமிழகத்தை ஆள்வார்" என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள், அந்தப் பதாகைகளில் இடம்பெற்றிருந்தன.
மவுன உண்ணாவிரதத்தின் நிறைவாக, செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக புனையப்பட்ட பொய் வழக்கில், நிரபராதி என அறிவிக்கப்பட்டு, மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என்னும் தீர்மானத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு. T. சிவா வாசித்தார். இதனைத் தொடர்ந்து, மூத்த நடிகர் திரு. எஸ்.எஸ். ராஜேந்திரன், பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
தமிழ்த் திரையுலகினரின் மவுன உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் திரைப்படம் தொடர்பான அனைத்துப் பணிகளும், படப்பிடிப்புகளும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டன. தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படக் காட்சிகள் நேற்று மாலை 6 மணி வரைரத்து செய்யப்பட்டன. இதேபோன்று, புதுச்சேரியிலும் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும், சென்னையில் மவுன உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திரையுலகினர் பேட்டி
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், செல்வி ஜெயலலிதாவுக்கு பேராதரவு தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் தமிழ்த் திரையுலகின் பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் மவுன உண்ணாவிரதம் மேற்கொண்டனர். செல்வி ஜெயலலிதா, பொய் வழக்கில் இருந்து மீண்டு, தமிழகத்தில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்பது உறுதி என உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நடிகர் - நடிகைகள் தெரிவித்தனர்.