மதுரையில், தி.மு.க. உட்கட்சி தேர்தல் மோதலில் அக்கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் - தி.மு.க.வினர் 6 பேர் நீதிமன்றத்தில் சரண்
Sep 20 2014 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் தி.மு.க. உட்கட்சி தேர்தல் மோதலில், அக்கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், தி.மு.க.வினர் 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மதுரை தல்லாகுளம் கண்மாய் மேலத்தெருவைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கருப்பையா, நேற்று முன்தினம் அதேபகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 ஆட்டோக்களில் திடீரென்று வந்த மர்ம கும்பல் கருப்பையாவை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. மேலும் மர்ம கும்பல் தாக்குதலில் படுகாயமடைந்த கருப்பையாவின் நண்பர்கள் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தி.மு.க. உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலால், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்தது. இதனிடையே, தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. வட்டச் செயலாளர் கருணாகரன், ரமேஷ் உள்ளிட்ட 6 தி.மு.க.வினர், மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இருதரப்பு விசாரணைக்கு பின்னர், 6 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி திரு. மகேந்திரபூபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.