மதுரை தி.மு.க. வேட்பாளர், வாக்கு கேட்கச் சென்ற இடங்களில் தி.மு.க.வினர் பணம் கொடுத்ததால் பரபரப்பு : தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக, பள்ளி மாணவர்களை தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகப் புகார்
Apr 17 2014 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர், தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது அவருடன் வந்த தி.மு.க.வினர் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு, தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் வழங்கினர். பணப் பட்டுவாடாவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிலர், தி.மு.க.வினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்குப் புறம்பாக, பள்ளி மாணவர்களை தி.மு.க.வினர் ஈடுபடுத்தி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் J.M.ஹாரூண், போடி அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்தார். இதனை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அங்கு விரைந்து சென்று, பணம் வினியோகிப்பதைப் படம்பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஹாரூணின் ஆட்கள், பத்திரிக்கையாளர்களை கடுமையாக தாக்கினர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்களை தாக்கியவர்கள் மீதும், காங்கிரஸ் வேட்பாளர் ஹாரூண் மீதும், நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, போடி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பத்திரிக்கையாளர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.