முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிக்கு வெற்றி - விளைநிலங்கள் வழியாக எரிவாயு கொண்டுசெல்லும் திட்டத்தை ரத்து செய்தது கெய்ல் - தமிழக அரசுக்கு விவசாயிகள், பொதுமக்கள் நன்றி
Apr 22 2014 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தொடர் எதிர்ப்பை அடுத்து, தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு கொண்டுசெல்லும் திட்டத்தை கெய்ல் நிறுவனம் ரத்து செய்துள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கைக்கு விவசாயிகளும், பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விவசாய நிலங்களின் ஊடே, 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெய்ல் நிறுவனம் திட்டமிட்டது. இத்திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால், அதனை கைவிட வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் கெய்ல் திட்டம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை கெய்ல் நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக எரிவாயு குழாய்களை பதிக்க கெய்ல் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஏற்கெனவே நிலங்களில் குழாய்களை பதிக்க தோண்டியுள்ள குழிகளை உடனடியாக சமன்படுத்தி, அந்நிலங்களை அதன் முந்தைய நிலையில் விவசாயிகளிடமும், நில உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க வேண்டும் என்றும், விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தொடரும் வகையில், ஏற்கெனவே பதிக்கப்பட்ட குழாய்களை கெய்ல் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு எடுத்துள்ள முடிவுகளை எடுத்துரைத்தார். இப்பிரச்னை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியை கைவிட முடிவு செய்துள்ள கெய்ல் நிறுவனம், இதற்காக வழங்கப்பட்ட சில ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை விவசாயிகளும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.