பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் ஏற்று, அமரர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில், மக்கள் சேவையில் முழு மனதோடு பாடுபடுவோம் : பேரறிஞர் அண்ணாவின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு கழக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மடல்

Sep 16 2014 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு இடைத்தேர்தல்களில், அ.இ.அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் அளித்துவரும் பேராதரவு, தமது ஆட்சிக்கு அளிக்கப்படும் நற்சான்றாக விளங்குவதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மக்களின் இந்த அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் ஏற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில், மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட அண்ணாவின் பிறந்த நாளில் சூளுரை ஏற்போம் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கழகத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், தமிழ் மக்களின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் குன்றாப் புகழுடைய மனிதராக நிலைத்து நிற்கும் மகத்தான தலைவராம் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 106-ஆவது பிறந்த நாள் என்னும் மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில், தம் உயிரினும் மேலான தமதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய அனைவரையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

உலக மொழிகளில் மிகவும் தொன்மை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி - தமிழ்ச் சமூகம் உலகின் மற்ற மானுட குழுக்களுக்கு வழிகாட்டியாகவும், எடுத்துக்காட்டாகவும் வாழுகின்ற வாய்ப்பினைப் பெற்ற சமூகம் - இலக்கியம், இலக்கணம், அறிவியல் கருத்துகள், நவீன சிந்தனைகள், புரட்சிகரமான சமூகப் பார்வை, எளியோருக்கும், நலிவடைந்தோருக்கும் உயர்வையும், சம வாய்ப்பையும் தர வேண்டும் என்ற அறநெறி ஆகியவற்றை தமிழ்ச் சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக தன் வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய புகழுக்குரிய உயர்ந்த நம் இனத்தில் பெருமைக்குரிய பிறப்பாக வந்து தோன்றியவர்தான் பேரறிஞர் அண்ணா- பல்வேறு சிறப்புகளையும் தனித் தன்மைகளையும் கொண்ட தமிழ்ச் சமூகம் காலப் போக்கில் பல வகைகளிலும் பின்தங்கி அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக அமைப்பு ரீதியாகவும் பெரிதும் நலிவுற்ற சமூகமாக மாறிக் கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார் நம் பேரறிஞர் அண்ணா - இந்த நிலையை மாற்றிட வேண்டும், தமிழர்கள் இழந்த புகழை ஈட்டிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்து அதற்கான பாதையாகவும், வழிகாட்டியாகவும், தந்தை பெரியாரின் நெறிகளை ஏற்று, அதன்வழி நடை போட்டார் பேரறிஞர் அண்ணா என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விடுதலை பெற்ற இந்தியாவில் மாற்றங்களையும், புரட்சிகளையும் தேர்தல் வழியாக வன்முறை இன்றி செய்து முடிக்க முடியும் என்ற அசைக்க முடியாத ஜனநாயக உணர்வுகளைக் கொண்ட பேரறிஞர் அண்ணா, கொட்டும் மழையில் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார் - உயர்ந்த சிந்தனைகளும், சமூக சமத்துவத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட மனிதாபிமானம் மிக்க பல தலைவர்கள் பேரறிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்று, அவர் கண்ட இயக்கத்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர் - அண்ணாவின் இயக்கம் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனதில் நிரந்தர இடம் பெற்றது - 'இது வரலாற்றில் ஒரு புதுமை!' என்று எல்லோரும் வியக்கும் வகையில் 1967-ல் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றது - பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வெற்றி ஒவ்வொன்றிலும் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கைமாறா உழைப்பும், கொண்டதையெல்லாம் அள்ளித் தரும் கொடை உள்ளமும் பெரும் பங்கு வகித்தன என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு புரட்சித் தலைவரின் இரக்க சிந்தனை, பழகியதால் ஏற்பட்ட பரிதாபம், கெஞ்சி நிற்பவர்க்கு இல்லை என்று சொல்ல முடியாத தெய்வ குணம் காரணமாக ஒரு தீய சக்தி அண்ணாவின் இயக்கத்தைக் கைப்பற்றியது - முதலமைச்சர் பதவிக்கும் வந்தது - அந்தத் தீய சக்தி எத்தகைய தீய குணங்கள் நிறைந்தது என்பதை அதனுடைய செயல்களே உலகிற்கு உணர்த்தும் நிலையையும், 'விதைத்ததை அறுக்காமல் விளையாட்டு முடிவதில்லை' என்ற அடிப்படை பௌதீக உண்மையையும் வெளிக்காட்டும் வகையில், இன்று அந்தத் தீய சக்தி, அரசியல் சதுரங்கத்தில் தப்பிக்க வழியில்லாமல் மாட்டிக் கொண்டிருப்பதை உலகமே பார்த்து பரிதாபத்தோடு சிரிக்கிறது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மேற்கொண்ட பெரு முயற்சியின் காரணமாக தீய சக்தியின் பிடியில் இருந்து அண்ணாவின் இயக்கம் காப்பாற்றப்பட்டதாகவும், தமிழ் மக்களின் உயர்வுக்காகவும், தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் உருவான திராவிட இயக்கம் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற தன்னலமற்ற மாபெரும் மக்கள் இயக்கமாக, நாட்டு மக்கள் நெஞ்சில் இடம் பெற்றிருக்கிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் அறிவு, ஆற்றல், உழைப்பு, மனிதாபிமானம், ஜனநாயகப் பண்பு, சமூக நீதிக்கான வேட்கை ஆகியவற்றின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மிகுந்த மதிப்பு வைத்திருந்தார் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நடைபோடும் உங்கள் அன்புச் சகோதரியாகிய தாமும், பேரறிஞர் அண்ணாவின் பன்முக ஆற்றலைக் கண்டு பெரிதும் வியந்திருப்பதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டிற்கு சிலகாலம் மட்டுமே முதலமைச்சராகப் பணியாற்றியபோதும், பேரறிஞர் அண்ணா அந்தக் குறுகிய காலத்தில் மக்களுக்கு செய்திட்ட சாதனைகளை தமக்கு ஏற்ற வழிகாட்டும் நெறிகளாகக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கை விளக்கப் பேரிகையாக விளங்கியது 'காஞ்சி' என்னும் இதழ்- அந்த இதழின் வளர்ச்சிக்கென நிதிதிரட்ட, தமது 'காவிரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடக நிகழ்ச்சியை நடத்தியதாகவும், இந்த நிகழ்ச்சிக்கும், பின்னர் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் நடைபெற்ற தமது 'காவிரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நிகழ்ச்சிக்கும் அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமை ஏற்று, நிகழ்ச்சியை முழுமையாகக் கண்டு களித்ததோடு, தம்மைப் பற்றி மிகுந்த அன்புடன் பாராட்டி உரையாற்றியதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு உரைகளிலும் தம்மைப் பற்றியும், நாட்டிய நிகழ்ச்சியின் தரம் பற்றியும் பல்கலை மேதையான பேரறிஞர் அண்ணா கூறிய புகழுரைகளை இன்றும் பசுமையாக தாம் நினைவில் கொண்டிருப்பதாகவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லாசியோடு, தாம் நடத்தி வரும் ஆட்சி, அண்ணா வழியிலான ஆட்சி என்றும், மக்கள் அனைவரும் அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதற்காக தம்முடைய அரசு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மற்றும் பல்வேறு இடைத் தேர்தல்களிலும் தமிழக மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்துவரும் பேராதரவு, தம்முடைய ஆட்சிக்கு அளிக்கப்படும் நற்சான்றாக விளங்குகிறது - மக்களின் இந்த அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் ஏற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இப்பொன்னாளில் சூளுரை ஏற்போம் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா நம் இயக்கத்தின் உயிர் மூச்சு - தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கென வாழ்ந்த மாபெரும் தலைவர் - என்றென்றைக்கும் நம் அனைவரது நன்றிக்கும், வணக்கத்திற்கும் உரியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இத்தகைய போற்றுதலுக்கும், சிறப்புக்கும் உரிய நம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும் அண்ணாவின் திருவுருவச் சிலைகளுக்கும், வழக்கம் போல கழகத் தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் நிறுவ இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் படங்களுக்கும் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடுமாறு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00