போர் நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்கப்படும் என கொடி அமர்வு பேச்சுவார்த்தையில் உறுதியளித்த ஒரு சில மணி நேரத்திலேயே, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு : எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரிப்பு
Aug 28 2014 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போர் நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்கப்படும் என கொடி அமர்வு பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் உறுதியளித்த ஒரு சில மணி நேரத்திலேயே, காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது அந்நாட்டு ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 20-க்கும் மேலான தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இந்த சம்பவங்களில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகினர். 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பா எல்லைப் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம், இந்திய வீரர்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடையிலான பேச்சுவார்த்தை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் நடைபெற்றது. மேலும், எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாக, இருதரப்பிலும் கொடி அமர்வு பேச்சுவார்த்தை அக்னூர் மாவட்டத்தின் நிகோவால் எல்லைப் பகுதியில் நேற்று நடைபெற்றது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற ஒரு சில மணி நேரத்திலேயே காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்முவில் பார்க்வால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நள்ளிரவு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படையின் சோதனைச் சாவடி சேதப்படுத்தப்பட்டது. மேலும், இன்று அதிகாலை 4 மணியளவில் அதே பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது. பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூடு 6 மணி வரை நீடித்தது. இந்திய வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதியில் உள்ள 25 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்கப்படும் என, கொடி அமர்வு பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் உறுதியளித்த ஒரு சில மணி நேரத்திலேயே, காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது அந்நாட்டு ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.