ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. சார்பில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, இஸ்லாமியப் பெருமக்களுக்கு சென்னையில் இஃப்தார் விருந்து அளித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால், இந்தியா அமைதிப் பூங்காவாகத் திகழும் என்று தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் மவுண்ட், பூந்தமல்லி சாலையில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தின் மாநாட்டு மண்டபத்தில், நேற்று மாலை அ.இ.அ.தி.மு.க. சார்பில், இஃப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வருகைதந்தபோது, மாநாட்டு மண்டப வாயில் முன்பாக திரண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், வக்ஃபு வாரியத் தலைவருமான திரு. தமிழ்மகன் உசேன், அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும், மக்களவை உறுப்பினருமான திரு. அன்வர் ராஜா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. S. அப்துல் ரஹீம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. T.K.M. சின்னையா ஆகியோர் மலர்க்கொத்துகள் வழங்கி வரவேற்றனர். நிகழ்ச்சியில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், வக்ஃபு வாரியத் தலைவருமான திரு. தமிழ்மகன் உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர் திரு. அப்துல் ரஹீம் வாழ்த்துரை வழங்கினார். அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும், மக்களவை உறுப்பினருமான திரு. அன்வர் ராஜா நன்றியுரையாற்றினார்.
தமிழக அரசின் சன்னி பிரிவு தலைமைக் காஜி ஹாஜி, சலாவுதீன் அயூப், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
முன்னதாக, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு, ஆற்காடு இளவரசர் முஹமது அலியின் மனைவி ஜனபாஹாஜிமா ஷாஹிபா சயீதா, பொன்னாடை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில், அ.இ.அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சித் தலைவர்களும், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் சிறப்புரை
அண்ணல் நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால், இந்தியா அமைதிப்பூங்காவாகத் திகழும் என இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்தார்.