மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் தி.மு.க.வினர் தொடர்ந்து தீவிரம் : தோல்விபயம் காரணமாக, விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Apr 23 2014 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தயாநிதிமாறன் போட்டியிடும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் பல்வேறு இடங்களிலும், விதிமுறைகளுக்குப் புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் தி.மு.க.வினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் போட்டியிடும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் பல்வேறு இடங்களில், விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் தி.மு.க.வினர் தொடர்ந்து ஈடுபடுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு டிபன் பாக்ஸ்களில் பணம் வைத்து கொடுத்த தி.மு.க. பிரமுகர்களை, அப்பகுதி அ.இ.அ.தி.மு.க.வினர் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், கடந்த 19-ம் தேதி இரவு, ராயப்பேட்டை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்த தி.மு.க. பிரமுகர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்றிரவும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அமைந்தகரை, புரசைவாக்கம், புதுப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகர் பகுதியிலும் தி.மு.க.வினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, தி.மு.க.வைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கோவை மாவட்டம் காரமடை பகுதியில், தேர்தல் நிதி தராத வர்த்தக பிரமுகர் மீது தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் பொய்யான தகவல் அளித்ததாக புகார் எழுந்துள்ளது. ராஜேந்திரன் என்ற அந்த வியாபாரியிடம் தேர்தல் நிதி கேட்டு தி.மு.க.வினர் மிரட்டியுள்ளனர். மறுப்பு தெரிவித்ததால், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவர் பணத்தை பதுக்கிவைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் பொய்யான தகவலை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பறக்கும்படை அதிகாரிகள் ராஜேந்திரனிடம் இருந்து 4 லட்சத்து 73 ஆயிரத்து 600 ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆனால் வியாபாரி ராஜேந்திரன், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார்.