திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில், இருசமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் - கடலூர் காவல் உதவி ஆய்வாளர் கொலை குறித்தும் பதிலுரை
Jul 24 2014 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில், இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, வெங்கல் காவல்நிலையத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைதாகி, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, புன்னம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, இன்று பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இச்சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போதுமான காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் தேவையான ஏற்பாடுகளை செய்து, இரு தரப்பினரிடையே மேலும் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு, கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணம் அல்ல என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.