தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம், குடமுழுக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பான முறையில் நடத்தப்படுவதாக சட்டப்பேரவையில் தகவல்
Jul 21 2014 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 3-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம், குடமுழுக்கு, சுவாமி வீதியுலா வாகனங்கள் புனரமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட கும்பமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலின் பங்குனி பிரம்மோற்சவ விழா வரும் பங்குனி மாதம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P. செந்தூர்பாண்டியன், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சியில்தான், திருக்கோயில்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்னேரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலின் பிரம்மோற்சவ திருவிழா பங்குனி மாதம், முதலமைச்சரின் வாழ்த்துக்களுடன் நடைபெற இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. T.K.M. சின்னையா, பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டப்பட்டி கிராமத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இருப்பதால், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவைப் பெற்று, அக்கிராமத்தில், கால்நடை கிளை மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின்போது பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. V. செந்தில் பாலாஜி, சங்கரன்கோயிலில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.