தமிழகம் மற்றும் புதுச்சேரில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Sep 2 2014 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. நடுவட்டம், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று கனமழை பெய்தது. நடுவட்டத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேன்வயல், தொரப்பள்ளி, புத்தூர் வயல் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட வருவாய் துறையினர் அளித்தனர்.
இதேபோல், வேலூர் மாவட்டம் வேலூர், காட்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இம்மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த வெயில் தணிந்து மழை பெய்துள்ளதால் குளிர்ச்சி நிலவியது. இதனிடையே, தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.