சென்னை விமான நிலையத்தில் மீண்டும் மேற்கூரை இடிந்து விழுந்ததால், பயணிகளும், பணியாளர்களும் அச்சம்
Apr 23 2014 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் இன்று மேற்கூரை இடிந்து விழுந்ததால், பயணிகளும், பணியாளர்களும் அச்சம் அடைந்தனர். சென்னை விமான நிலையம் புதுபிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை மேற்கூரை இடிந்து விழுதல் உள்ளிட்ட 20 அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு விமான நிலைய முனையம் முழுமையாக கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த ஆண்டு, அதனை, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அவசரக் கோலத்தில் திறந்து வைத்தது. திறக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னரே பயன்பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து மேற்கூரைகள் சரிந்து விழுவதும், கண்ணாடிகள் உடைந்து சிதறுவதும் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. கண்ணாடி உடைந்து சிதறுவது, லிஃப்ட் நடைமேடை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால் பயணிகளும், பணியாளர்களும் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் வருகை பகுதியில் இன்று மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால், பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர். சென்னை விமான நிலையம் புதுபிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற அசம்பாவிதங்கள் 20 முறை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.