திருப்பூரில் விரைவில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை கட்டப்படும்; இதுவரை 53 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, கட்டடங்கள் கட்ட 1,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது : சட்டப்பேரவையில் அறிவிப்பு
Aug 1 2014 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழிலாளர்கள் நலம் காக்கும் வகையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு அறிவித்தபடி, திருப்பூரில் விரைவில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை கட்டப்படும் என சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.ப.மோகன் இதனை தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் திரு.நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதிதாக பயணிகள் விடுதி கட்டப்படுவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 3-வது ஆட்சிக் காலத்தில் இதுவரை 53 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்கு கட்டடங்கள் கட்ட ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.P.பழனியப்பன் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு 56,802 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்த நிலையில், முந்தைய தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு 10 முறை மண்ணெண்ணெய் அளவைக் குறைத்து, தற்போது 29,060 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், எனினும், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
பச்சமலைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 2 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.S.P.சண்முகநாதன் தெரிவித்தார்.