கஜ புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்
Nov 14 2018 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜ புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 56 கிலோமீட்டர் கடற்பரப்பில் உள்ள 44 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்காக, பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், விழுப்புரம் சரக D.I.G. திரு. சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாம்பன் மற்றும் மன்னார்வளைகுடா கடல் பிராந்தியங்களில் இந்தியக் கடலோர காவல் படை கப்பல் மற்றும் ஐ.என்.எஸ் விமானப்படை ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பேரிடர் மீட்புக் குழுவினரும் ராமநாதபுரம் வந்தடைந்துள்ளனர். தேவைக்கேற்ப பேரிடர் மீட்புக்குழு பயன்படுத்தப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.அண்ணாதுரை தலைமையில், கும்பகோணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாக்கவும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்
திரு. நாராயணசாமி, அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.