பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை : உரிய ஆவணம் இல்லாததால் ரூ.3.80 லட்சம் பறிமுதல்
Jul 24 2019 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூரில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில், கார் ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அப்போது, அதில் வந்தவர்கள், ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள், நெசவுத் தொழில் செய்து, ஆடைகளை காஞ்சிபுரத்தில் விற்பனை செய்துவிட்டு பணத்தை எடுத்து வந்ததாக கூறினர். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து வாலாஜாபேட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, வரும் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அன்றைய தினம் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.