8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு - மக்கள் விரும்பாத திட்டத்தை ஏன் திணிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு சரமாரி கேள்வி
Jul 22 2019 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க, மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், மக்கள் விரும்பாத திட்டத்தை ஏன் திணிக்கிறீர்கள் என மத்திய, மாநில அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக மத்திய மற்றும் தமிழக அரசுகள் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை மாதம் ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்தது. 8 வழிச் சாலை திட்டத்தை மக்கள் விரும்பவில்லை என்றால் ஏன் திணிக்க வேண்டும்? வேறு மாநிலத்தில் திட்டத்தை நிறைவேற்றலாமே? என, மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளித்த நிலையில், வாக்குறுதியை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யவேண்டுமென மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வரும் 31-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.