மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல் - மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்வு தடையாக அமையும் என்றும் கருத்து
Jul 19 2019 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திரு. டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவ பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள், அதன்பிறகு டாக்டராக பணி புரிவதற்கும், மருத்துவத்துறையில் பட்டமேற்படிப்பு பயில்வதற்கும் நெக்ஸ்ட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல என தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வருகிறவர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய நுழைவுத்தேர்வுகளைக் கொண்டு வரலாமே தவிர, இந்தியாவிலேயே படித்துவிட்டு வருகிறவர்களுக்கு புதிதாக இன்னொரு நுழைவுதேர்வு வைப்பது, நம்முடைய கல்வி முறையின் மீது நமக்கே நம்பிக்கை இல்லாததன் வெளிப்பாடாகும் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் மருத்துவத்துறை மேற்படிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
சாதாரண கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவைச் சிதைத்திருக்கிற நீட் தேர்வு போல, மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்து சாதிக்க நினைப்பவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு தடையாகவே அமையும் என தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிற இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.