மதுரையில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி பாக்கி : தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்
Jul 8 2019 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாநகராட்சியில், 40-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், பல கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் நிதிநிலை மற்றும் அதிகபட்சமாக வரி பாக்கி வைத்துள்ள முதல் 10 பேரின் பெயர் மற்றும் வரி எண்ணை தெரிவிக்கக்கோரி, நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹக்கிம் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டிருந்தார். அதில் முதல் 40 பேர் மட்டும் வைத்துள்ள வரி பாக்கி 7 கோடியே 76 லட்சம் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தகவல் அளித்தது. மதுரை மேலமாசிவீதியில் அமைந்துள்ள எல்.ஐ.சி அலுவலகம், மீனாட்சி அம்மன்கோயில் நிர்வாக அலுவலகம் மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் கோடிக்கணக்கான ரூபாயை வரிசெலுத்தாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. சாதாரண ஒரு குடிமகன் வரிபாக்கி செலுத்த தவறினால் குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பு துண்டிப்பு என பல்வேறு முறைகளில் எச்சரிக்கை விடுக்கும் மாநகராட்சி நிர்வாகம், பலமடங்கு வருமானத்தை ஈட்டும் நிறுவனங்கள், வரிபாக்கி வைத்திருப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பாக உள்ளது என மதுரை மக்கள் கூறுகின்றனர்.