பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் விவசாயத்தை அழித்துவிடும் நோக்கில் செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட SDPI கட்சி சார்பில் கண்டன புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், தமிழகத்தில் விவசாயத்தை அழித்துவிட்டு கார்ப்பரேட் தொழிற்சாலைகளை கொண்டுவந்து, தமிழகத்தை பாலைவனமாக மாற்ற துடிக்கும் மத்திய, மாநில அரசுகளின் செயலைக் கண்டித்து கோஷமிட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலை அமைக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் அமைப்புகள் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊர்வலமாக வந்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மரபை மாற்றி தமிழன்னை சிலையை அமைக்க முயற்சிக்கும் அரசின் நடவடிக்கை, தமிழன்னைக்கும், தமிழ் இனத்திற்கும் செய்யும் துரோகம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் முக்கிய சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. மது அருந்த வருபவர்கள் குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதாக கூறி, மதுபானக்கடையை மூடக்கோரி ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தில் சுமார் ஆயிரத்து 600 ஏக்கரில் விவசாய விளை நிலங்களை, ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆக்கிரமித்து எரிவாயு குழாய்களை அமைத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிவாயு குழாய்கள் அமைப்பதை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட 29வது வார்டு அண்ணா நகரில் 35 வருடங்களாக சாலையை சீரமைக்காததால், அப்பகுதி மக்கள் அவதியுற்று வருகின்றனர். அப்பகுதியை சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கண்டுகொள்ளாததால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு வெற்றிலை பாக்கு மற்றும் சீர்வரிசை தட்டுடன் சென்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர். கோரிக்கையை அரசு பரிசீலிக்கா விட்டால், போராட்டம் தீவிரமடையும் என அவர்கள் எச்சரித்தனர்.