மருத்துவர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - தமிழகத்திலும் மருத்துவ பணிகள் பாதிப்பு : புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை
Jun 17 2019 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்திலும் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சேர்ந்த சுமார் ஆயிரத்து 500 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து 4 லட்சம் மருத்துவர்களும், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் மருத்துவர்களும் பங்கேற்றுள்ளதாக, இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வள்ளியூர், அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில், புறநேயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரியில், அரசு தலைமை மருத்துவமனை அருகே, இந்திய மருத்துவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன பேரணியில், அரசு மருத்துவர்கள் மட்டுமின்றி பயிற்சி மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில், காலை 8 மணியிலிருந்து 9 மணி வரை பணிகளை புறக்கணித்து, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஒரு மணி நேர அடையாள போராட்டத்தால், புற நோயாளிகள் சிகிச்சை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.