இடைத்தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வில் வலுக்கும் கோஷ்டிப் பூசல் : அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை உடனடியாக மாற்றாவிட்டால் தேர்தல் பணியாற்றப்போவதில்லை என நிர்வாகிகள், தொண்டர்கள் போர்க்கொடி
Apr 26 2019 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இடைத்தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வேட்பாளர்களை உடனடியாக மாற்றக்கோரி வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முனியாண்டி என்பவர் அறிவிக்கப்பட்டது, மதுரை புறநகர் பகுதி அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளரான முனியாண்டிக்கு சீட் வழங்கியதற்கு முன்னாள் எம்.எல்.ஏவும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான முத்துராமலிங்கம் தரப்பினர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சீனிவேல், ஏ.கே.போஸ் தரப்பினர் என பல முனைகளில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், ஓபிஎஸ் - ஈபிஎஸ்சின் முடிவுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ சீனிவேலின் ஆதரவாளர்கள் அதிமுக வேட்பாளர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் ஆடியோவை வெளியிட்டு வருவதால் அதிமுகவில் உட்கட்சி பூசல் வலுத்துள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மோகனை மாற்றாவிட்டால், தேர்தல் பணியாற்றப்போவதில்லை என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் மோகனுக்கு எதிராக அதிமுகவினர் போட்டி கூட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.