தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் : தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்பு
Apr 24 2019 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தொழிலாளர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா திருவாலங்காடு பகுதியில் ரயிலடித்தெரு, கன்னிகோவில்தெரு, அளவுதடிதெரு, வள்ளுவன்தெரு ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்கள், ரயில் இருப்புப் பாதையை ஒட்டியுள்ள சாலையாக கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் அந்த பாதையை மூட, ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த முயற்சியை கண்டித்தும் தங்களுக்கு மாற்றுப் பாதை அமைத்துதர வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் சார்பில் ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன. பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியம் வேலம்பட்டி ஊராட்சியில் சேர்வீடு, துவராபதி, ராக்காச்சிஅம்மன் கோவில் தெரு, அண்ணாநகர், அசோக்நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதி மக்களின் பயன்படிற்காக 15 மேல்நிலை குடிநீர் தண்ணீர் தொட்டிகள் உள்ளன. தற்போது, வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவதியுற்ற மக்கள், குடிநீர் வழங்கக் கோரி, யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.