தமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை : மக்கள் மகிழ்ச்சி
Apr 24 2019 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோவில் பகுதிகளிலும் இரண்டு நாட்கள் மாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதற்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சூலக்கரை அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, திருச்சுழி, ம.ரெட்டியபட்டி, கல்லூரணி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. பலத்த இடி மின்னல் காரணத்தினால் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் குற்றாலம், செங்கோட்டை, இலஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழைபெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகாரித்துள்ளது.
தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இளயரசநேந்தல், வானரமுட்டி, குருமலை போன்ற பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவி வருவதுடன் நிலத்தடி நீர் மட்டமும் கனிசமாக உயர்ந்துள்ளது.