நாடாளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் 2-ம் பட்டியலை, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்களும், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது 2-ம் பட்டியலை கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வடசென்னை தொகுதியில், வடசென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. P. சந்தானகிருஷ்ணன் - அரக்கோணம் தொகுதியில், வேலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. N.G. பார்த்திபன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேலூர் தொகுதியில், முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான திரு. K. பாண்டுரங்கன் - கிருஷ்ணகிரி தொகுதியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S. கணேசகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில், முன்னாள் அமைச்சரும், கழக தலைமை நிலையச் செயலாளருமான திரு. P. பழனியப்பன் - திருவண்ணாமலை தொகுதியில், வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் திரு. A. ஞானசேகர் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
ஆரணி தொகுதியில், முன்னாள் அமைச்சரும் கழக தேர்தல் பிரிவுச் செயலாளருமான திரு. G. செந்தமிழன் - கள்ளக்குறிச்சி தொகுதியில், விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M. கோமுகி மணியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திண்டுக்கல் தொகுதியில், சுரபி கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை தாளாளர் திரு. P. ஜோதிமுருகன் - கடலூர் தொகுதியில், கழக பொறியாளர் அணிச் செயலாளர் திரு. K.R. கார்த்திக் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில், கழக கொள்கை பரப்புச் செயலாளரும், தேனி மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. தங்க தமிழ்செல்வன் - விருதுநகர் தொகுதியில், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு. S. பரமசிவ ஐயப்பன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
தூத்துக்குடி தொகுதியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் டாக்டர் ம. புவனேஸ்வரன் - கன்னியாகுமரி தொகுதியில், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. E. லெட்சுமணன் ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் 8 பேரின் பெயர்களும், புதுச்சேரி மாநில சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், வேலூர் கிழக்கு மாவட்டம், நெமிலி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. T.G. மணி - பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. D.K. ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், கழக அமைப்புச் செயலாளரும், கழகத் தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. R. தங்கதுரை - திருவாரூர் தொகுதியில், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S. காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதியில், கழகப் பொருளாளரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. M. ரெங்கசாமி - ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய கழகச் செயலாளர் திரு. R.ஜெயகுமார் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
பெரியகுளம் தொகுதியில், கழக மருத்துவரணித் தலைவர் டாக்டர் K.கதிர்காமு - விளாத்திகுளத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு. K. ஜோதிமணி ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் புதுச்சேரி மாநிலக் கழக வர்த்தக அணிச் செயலாளர் திரு. N. முருகசாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.