உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 13 கோடி ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தகவல்
Mar 22 2019 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 13 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் இதுவரை 30 பேர் மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார். தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க தமிழகத்தின் சிறப்பு அதிகாரியாக திரு.மதுமகாஜன் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், மாநிலம் முழுவதும் 79 பேர் செலவின கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மத்திய சென்னைக்கு மட்டும் 3 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட 13 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் திரு.சத்யபிரதாசாஹு கூறினார்.
தமிழகத்தில் உரிமம் பெற்று பொதுமக்கள் வைத்துள்ள துப்பாக்கிகளில் இதுவரை 18 ஆயிரத்து 768 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், 38 துப்பாக்கிகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து தொலைபேசி எண்ணுடன் புகார் தெரிவிப்பவர்களுக்கு அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்படும்- இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன- வங்கி பரிவர்த்தனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்றும் திரு.சத்யபிரதாசாஹு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.