மதுரையில் அதிமுக வேட்பாளர் கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் : ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நோயாளிகள் அவதி
Mar 21 2019 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் தேர்தல் விதிகளை மீறி அதிமுக வேட்பாளர் கூட்டம் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக்கூட்டம் அரசு மருத்துவமனை அருகேயுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள், தங்களுடைய நுாற்றுக்கணக்கான கார் மற்றும் வாகனங்களை சாலைகளில் நிறுத்தினர். பொதுமக்களின் நலனை சற்றும் கருத்தில் கொள்ளாமல், சாலையை மறைத்து கூட்டம் நடத்தப்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை முழுவதிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் நீண்ட நேரமாக நெரிசலில் சிக்கி தவித்தன. இதேபோல் வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை உருவானது. அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு பகுதி அருகே விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்து அ.தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து முறையிட்ட நோயாளிகளை தகாத வார்த்தைகளால் திட்டினர். அதிமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடும் போக்குவரத்து நெரிசலால் கோரிப்பாளையம் முதல் அண்ணா பேருந்துநிலையம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, மதுரை மேலுார் பகுதியிலும் அதிமுக வேட்பாளா் பிரச்சாரத்திற்கு சென்றபோது அனுமதித்த வாகனங்களை காட்டிலும் அதிக வாகனங்களுடன் அ.தி.மு.க.வினர் அணிவகுத்து சென்றனா். அப்போதும் கூட அதிகாரிகளும், அரசும் இதனைக் கண்டுகொள்ளவில்லை.