ராமநாதபுரம், நீலகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கழக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணன் அறிமுக கூட்டம் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் போன்ற நகரக் கழகங்கள் சார்பில் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு.தாம்பரம் நாராயணனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.ம. கரிகாலன், பல்லாவரம் நகரக் கழகச் செயலாளர் திரு.கே.ஜி. சிங்காரம், பம்மல் நகர கழக செயலாளர் திரு.பி.ஜெயகோபி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் திரளாக பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு. முட்டுக்காடு முனுசாமிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் ஆதரவு அளித்தனர். கூவத்தூர், பவுஞ்சூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், ஓட்டுனர் சங்கங்கள், விவசாய இயக்கத்தினர் மற்றும் சிறுபான்மையினர் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெற வேண்டுவதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.கோதண்டபாணி, மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.G.செந்தமிழன், கழக அமைப்புச் செயலாளர் திரு.வாசுதேவன், ஒன்றிய செயலாளர் திரு.பாரதி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் SDPI கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் திரு.அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.வ.து.ந.ஆனந்தை அறிமுகப்படுத்தி, கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள SDPI கட்சி தொண்டர்கள் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் கழக வேட்பாளர் திரு.வ.து.ந.ஆனந்த், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஜி.முனியசாமி மற்றும் SDPI கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய திரு.வ.து.ந.ஆனந்த், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும், லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்போவதாக உறுதி அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில், SDPI கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆளுங்கட்சி மற்றும் தி.மு.க.வின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும், கழக வேட்பாளர்கள் தொகுதிக்குச் செல்லும்போது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.