மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சக்கரா பள்ளியைச் சேர்ந்த பைசல் ரகுமான் என்ற இளைஞர் மர்மான முறையில் உயிரிழந்தார். அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கும்பகோணம் - தஞ்சை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பழையகாலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தனிப்பட்டா வழங்கக்கோரி மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததால், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய நிலத்தை எடப்பாடி தரப்பைச் சேர்ந்தவர் அபகரிக்க முயன்றதால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். தோகைமலையைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த கே.ஆர். விஜயன் என்பவர், முருகேசன் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டபோது தன்னை துன்புறுத்தியதாகவும் விவசாயி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் அரசு திட்டத்திற்காக, நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வு முறையாக இல்லை என்று கூறி பொதுமக்கள் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
நாகை மாவட்டம் மணல்மேடு அருகே அரசு மணல் குவாரிகளில், மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்கப்படாமல் 6 மாதகாலமாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பேரணியாக புறப்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகே எறையூர் கிராமத்தில் 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் தங்களுக்குரிய விவசாய நிலங்களுக்கு பட்டா வேண்டி நரிக்குறவ இனத்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். பட்டா இல்லாததால் வறட்சி நிவாரணம் மற்றும் படை புழுக்களால் தாக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு பெற முடியாத சூழல் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இயங்கி வரும் அரசு மதுபானக்கடையால், பெரும் இடையூறு ஏற்படுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வரும் அரசு மதுபானக்கடையை உடனடியாக மூட வலியுறுத்தியும், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.