ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தல் - ஆலையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை நிறுத்தவும் கோரிக்கை
Feb 19 2019 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திரு. வேல்முருகன், ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும், இதே சட்ட போராட்டத்தை, அரசு உயர் நீதிமன்றத்திலும் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், ஆலையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் பேராசிரியை பாத்திமாபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, ஒருநபர் ஆணையம் நேற்று 7-ம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை குழு, இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்த உள்ளது.