காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ்படை வீரர்களுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி பேரணி நடைபெற்றது. இராஜாஜி பூங்காவில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியே பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியின் முடிவில் வீரர்களின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட்டியம் அருகே கவுத்தரசநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி, முக்கியவீதிகள் வழியாக மவுனஊர்வலம் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சியில் வர்த்தகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தான் குப்பம் குடியிருப்போர் நல சங்கம், வியாபாரிகள் நலசங்கம் சார்பில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக வியாபாரிகளும், பொதுமக்களும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம் சென்றனர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் குடியிருப்பு வாசிகள், குழந்தைகள், இளைஞர்கள், போலீசார் உள்ளிட்ட ஏராளமானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஊர்வலமாக சென்று உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதி பொதுமக்கள் சார்பில், உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், பங்கேற்ற திருப்பூர் பனியன் தொழிலாளர்கள், தங்களின் சார்பில் இந்திய ராணுவத்திற்கு நிதி உதவியாக ஒரு மாத சம்பளம் வழங்குவதாக தெரிவித்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாகுமரி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.