சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெண்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். கம்பு, கேழ்வரகு, கூழ் மற்றும் தானிய வகைகளால் செய்யப்பட்ட உணவு வகைகள் கண்காட்சியாக வைத்து விற்பனை செய்யப்பட்டன. குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களும் குழந்தைகளும் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர்.
தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, கால்நடைகளை குளிப்பாட்டி, மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, குங்குமப் பொட்டிட்டு, கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், பசு, காளை, எருமை ஆகியவற்றுக்கு பொங்கல் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொண்டையம்பாளையம் பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட களிமண்ணால் ஆன கால்நடைகள் மற்றும் குழந்தைகளின் உருவங்களை செய்து கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். பின்னர், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் நவகிணறு மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உருவ வழிபாடு செய்து மாட்டுப்பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வேடப்பட்டி, கொழுமம், கிருஷ்ணபுரம் உட்பட பல கிராமங்களில் மாட்டு பொங்கல் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. வாழைமரங்களை நான்கு புறமாக கட்டி, நடுவில் தெப்பக்குளம் மாதிரி அமைத்தும், சுற்றி இளநீர் மற்றும் ஐந்து வகை பொங்கல் வைத்து சாமி கும்பிட்ட பிறகு, படைத்த பொங்கலை மாடுகளுக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தமிழர் திருவிழா நிகழ்ச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிகளில் பயணித்தும், ஜல்லிகட்டு காளைகளையும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தும் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் போன்ற பல்வேறு கிராமிய இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
ஈரோட்டை அடுத்த மூலக்கரையில் சுமார் 50 குடும்பத்தினர் ஒன்றினைந்து மாட்டு பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர். வீட்டில் உள்ள மாடு, காளை உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி ஊரின் மையப்பகுதிக்கு அழைத்து வந்து வர்ணம் பூசி அலங்கரித்தனர்.
பின்னர் ஒரே பானையில் பொங்கல் வைத்து மாடுகளுக்கு படையலிட்டு
வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உம்பளச்சேரியில், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காளைகளின் கொம்புக்கு வண்ணம் பூசி நெத்தியில் பொட்டு வைத்து விவசாயிகள் அலங்காரம் செய்தனர். வாழை இலையில் வெண்பொங்கல் வைத்து படையலிடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, கோமாதா பூஜையுடன் மாட்டுப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. மாடுகளுக்கு சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. இதில், திரளான இஸ்லாமியப் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் பசு. பசுக்கன்று ஆடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து பொங்கல் வைத்து படையலிட்டனர். சூரிய பகவானுக்கு பூஜை செய்து பின்னர் கால்நடைகளை வழிபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நந்தகோபால் திருக்கோவிலில் உள்ள தம்பிரான் கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. பிறந்த கன்று குட்டிகளுக்கு பொதுமக்கள் தேங்காய், வாழைப்பழம், வைத்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் பகுதியில் மலைவாழ் பழங்குடி மக்கள் கலை பொங்கல் விழா கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
புதுச்சேரியில் மாட்டுப்பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா நடத்தியது. பரதநாட்டியம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகம் நடைபெற்றது. இதனை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.