பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - தெறிக்கவிட்ட இளைஞர்கள்
Jan 17 2019 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. காளைகள் முட்டியதில் 48 வீரர்கள் காயமடைந்தனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று உற்சாகத்துடன் நடைபெற்றது. முதலில் 7 கோவில் காளைகள் களமிறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. இப்போட்டியில் 567 காளைகளும், 739 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்க முயன்றபோது மாடுகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் உட்பட 48 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 13 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாரம்பரிய பெருமைமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டியை, உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
உசிலம்பட்டி அருகே மாலப்பட்டியை சேர்ந்த பிரபு என்பவரின் காளைக்கு முதல் பரிசாக ஆம்னி கார் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள், கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கிராமமக்கள், மாடுபிடி வீரர்களின் ஒத்துழைப்பால் போட்டி சிறப்பாக நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் திரு. நடராஜன் தெரிவித்தார். அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்காக ஆயிரத்து 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.