குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார் பூபேந்திர பட்டேல் - வரும் 12-ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
Dec 9 2022 8:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா வரலாறு காணாத வகையில், 156 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, அம்மாநில முதலமைச்சராக, பூபேந்திர பாய் பட்டேல் வரும் 12-ம் தேதி பதவியேற்கிறார்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு, கடந்த 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், 64 புள்ளி மூன்று மூன்று சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இங்கு வழக்கமாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையேதான் போட்டி இருக்கும். ஆனால் இந்த முறை ஆம் ஆத்மியும் களமிறங்கியதால், மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே இருந்தன.
இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 92 இடங்களே தேவை என்ற நிலையில், 156 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., 7-வது முறையாக ஆட்சியமைக்கிறது.
வரும் 12-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பா.ஜ.க மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
காங்கிரஸ், 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆளும் பா.ஜ.க.வுக்கு சவால்களை விடுத்து வந்த ஆம் ஆத்மி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.