வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி
Dec 12 2019 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. ஹைதராபாத் மற்றும் திருவனந்தபரத்தில் நடைபெற்ற போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று, ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருந்தன.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். அதிவேமாக அரை சதத்தைக் கடந்த ரோஹித் சர்மா 34 பந்துகளில் 71 ரன்களை எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பாண்ட் ரன் ஏதும் எடுக்காமல், பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுலுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரின்போது, 91 ரன்கள் எடுத்திருந்த கே.எல். ராகுல் வெளியேற, களத்தில் வாணவேடிக்கை காட்டிய விராட் கோலி, கடைசி வரை ஆட்டமிழக்காமல், 29 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் வில்லியம்ஸ், பொல்லார்ட் மற்றும் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரர்கள், லென்டில் சிமோன்ஸ், பிரன்டன் கிங், நிகோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஹெட்மயர் மற்றும் கேப்டன் பொல்லார்ட் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால், அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஹெட்மயர் 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜாசன் ஹோல்டர் 8 ரன்னில் வெளியேறினார். 33 பந்துகளில் அரை சதத்தை பதிவு செய்த கேப்டன் பொல்லார்டு, 68 ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸின் வெற்றி வாய்ப்பு முழுவதும் சரிந்தது. இறுதியில் அந்த அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், முகமது சமி, குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.