வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
Dec 7 2019 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டி-20 கிரிக்கெட்டில், விராட் கோலி, கே.எல். ராகுல் அதிரடி ஆட்டத்தால், வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ் - எவின் லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிம்மன்ஸ் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து லிவிஸ் உடன் பிராண்டன் கிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. லிவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்களும், கிங் 31 ரன்னிலும் அடித்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஹெட்மையர் 41 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் அடித்தார். பொல்லார்டு 19 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 37 ரன் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. ஹோல்டர் 9 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் சஹால் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா இறங்கினர். ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி, ராகுலுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக விளாசினர். முதலில் அரை சதம் கடந்த கே.எல். ராகுல் 62 ரன்னில் வெளியேறினார். இவர் கோலியுடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 4 ரன்னிலும் அவுட்டாகினர். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி தனது அதிரடியை தொடர்ந்தார். இறுதியில், இந்தியா 18 புள்ளி 4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல், 50 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 94 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றி மூலம் இந்தியா இந்த டி-20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி, கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நாளை நடக்கிறது.