இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பங்களாதேஷ் திணறல்
Nov 15 2019 10:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் முகமது ஷமி, அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 150 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி ஆட்டமிழந்தது.
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இந்தூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் மொமினுல் ஹக், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 31 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் மொமினுல் ஹக் உடன், அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடங்கியதும், பங்களாதேஷ் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருந்தபோது, 37 ரன்கள் எடுத்த நிலையில் மொமினுல் ஹக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெஹ்முதுல்லா, 10 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் 115 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பங்களாதேஷ் இழந்தது. தேனீர் இடைவேளைக்குப் பின்னர் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ், 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.