பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச டி20 போட்டி - 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி
Nov 11 2019 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச டி20 போட்டியில், இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில், தீபக் சகார் 'ஹாட்ரிக்' விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.
இந்தியா - பங்களாதேஷ் இடையேயான, கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்றது. 'டாஸ்' வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் மகமதுல்லா பவுலிங் தேர்வு செய்தார். கேப்டன் ரோகித், ஷிகர் தவான் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை அளித்தனர். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐய்யர் ஆகியோர் பொறுப்புடன் அபாரமாக விளையாடி, அரைசதம் அடித்தனர். 20 ஓவர் முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ஸ்ரேயால் ஐய்யர் 62 ரன்களும், ராகுல் 52 ரன்களும் எடுத்தனர்.
175 ரன்கன் இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணியின் வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடி இந்திய பவுலர்களுக்கு தொல்லை தந்த முகமது நயீமை, ஷிவம் துபே அவுட் ஆக்கினார். பங்களாதேஷ் அணி, 19 புள்ளி 2 ஓவர்களில், 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானனது. இந்திய அணி தரப்பில், அதிகபட்சமாக தீபக் சகார் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம், 2 - 1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.
தீபக் சகார் வீசிய 18-வது ஓவரின் கடைசி பந்தில் சபியுல் அவுட்டானார். கடைசி ஓவரை வீசிய சகாரின், முதலிரண்டு பந்துகளில் முறையே முஸ்தபிஜுர், அமினுல் ஆட்டமிழந்தனர். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டியில், 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார்.